Tuesday, November 16, 2010

9 - மென்மையான வைரங்கள் - ஒரு பெண்ணின் கதை

கனடாவில் பெண்கள் வீட்டிலும் வெளியிலும் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்களை இனம் கண்டு, அவற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் என்ன என்று உணர்த்தும் வகையில் எங்கள் சமூகத்திற்காக ஒரு திரைப்படம் தயாரிப்பதற்கான அரசாங்க உதவியுடன் தயாரிக்கப்பட்ட திரைப்படம் இது.

மெல்லியலார் என்று கருதப்படும் ஒரு பெண் வைரமாக வலுவுள்ளவளாக மாறுவதை குறிக்கும் தலைப்புத்தான் - மென்மையான வைரங்கள்.
இதற்கான மூலக்கதையை எஸ்.எஸ்.அச்சுதன் எழுதுவதென்று முடிவாகியது. நானும் அவருமாக முழுக்கதையையும் உருவாக்கியபின்னர், அதற்கான திரைக்கதை வசனங்களை எழுத ஆரம்பித்தேன்.

இதில் நடிகர்களாக ஆனந்தி ஸ்ரீதாஸ், எஸ்.மதிவாசன், அனுஷா ஜெயலிங்கம், எஸ்.ரி.செந்தில்நாதன், துஷி ஞானப்பிரகாசம், ராதிகா போன்றோரை முக்கிய பாத்திரங்களுக்கு தெரிவு செய்தோம். ரவி அச்சுதன் தான் படப்பிடிப்பாளர்.

முக்கியகதைக்கு வெளியே பல கிளைக்கதைகள் உருவாகியதினால், நிறையவே கலைஞர்கள் சேர்த்துக்கொளளப்பட வேண்டி வந்தது. படப்பிடிப்பும்  தொடர்ந்துகொண்டே போனது. படப்பிடிப்பாளருக்கு வேறு வேலைகள் வந்தன. எப்படியோ காலதாமதமாகியது.

படத்தில் ஒரு திருமணக்காட்சி வருகிறது. அங்கு க்தாநாயகி தன் பழைய காதலணை எதிர்பாராமல் சந்திக்க நேரிடுகிறது. கதையின் முக்கிய திருப்பமே அதுதான். எனக்கு மிகவும் பிடித்த காட்சி. இந்தக்காட்சி படம்பிடிக்கப்பட்ட பின்னர்தான், இந்தியப்பெண் எழுத்தாளர் ஒருவரின் (வாசந்தி? அல்லது அனுராதா ரமணன்?) சிறுகதை ஒன்றில் (ஆனந்தவிகடனில்) எனது வரிகள் வர்ணனை, சம்பவம் அப்ப்டியே வருவதை வாசித்தேன். நிச்சயமாக நான் எழுதியதை அவரோ, அவர் எழுதியதை நானோ முன்னதாக அறிந்திருக்கும் வாய்ப்பு இருக்கவில்லை.. ஆனால் இது எப்படி......

அப்போது கனடாவில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்த அளவெட்டி என்.கே.பதமநாதன் (நாதஸ்வரம்) -  நாச்சிமார் கோவிலடி கணேச்பிள்ளை (தவில்) கச்சேரியையும் இப்படத்தில் இணைத்துக்கொண்டது, சந்தோசமான ஒரு திருப்பம்.

ஒருமாதிரி படப்பிடிப்பு முடிந்ததும், படத்தொகுப்பு (எடிட்டிங்) பல கைகள் மாறின. இனி வராது,..வரவே வராது என்று நினத்தபின்னர், எப்படியோ அரும்பாடுபட்டு, திரை அரங்கு வரை கொண்டுவந்து விட்டேன்.

இரண்டு வார இறுதிக்காலத்தில் திரையரங்கில் ஓரளவு கூட்டத்துடன் ஓடியது. அவ்வளவுதான்.


No comments:

Post a Comment