Saturday, November 13, 2010

6- Blendings - இலங்கையில் ஆங்கிலத் திரைப்படம்

வாடைக்காற்று திரைப்படத்தின் உதவி இயக்குனராக நானும், உதவி எடிட்டராக (படத்தொகுப்பாளர்) எல்மோ ஹலிடேயும் ப்ணியாற்றிய காலத்தில் இருந்தே நெருங்கிய நண்பர்களாகி விட்டோம்.

தமிழ் திரைப்படம் என்று யாராவது சொன்னால் போதும். என்னிடம் அழைத்துக்கொண்டு வந்துவிடுவார். உதாரணமாக் ஸ்வர்ணமகால் என்ற நகைக்கடைகாரார்கள் தமிழ்த் திரைபடங்களை இலங்கையில் திரையிட்ட காலம். சரத்குமார் அப்பாவும், மகனுமாக நடித்த "நாட்டாமை" திரைப்படத்தை நானும் ஹலிடேயும் "எடிட்" பண்ணியப பின்னர்தான் திரையிட்டார்கள்.

திடீர், திடீரென்று இப்படி எதாவது வேலையோடு (வருமானத்துடன்)என்னிடம் வருவார் என் நண்பர்.



இப்படித்தான் ஒருமுறை. சிங்களத்தொலைக்காட்சி நாடகங்கள் இயக்கும் மோஹன் (முகமட்) நியாஸ் என்பவருடன் என் வீட்டிற்கு, எல்மோ ஹலிடே வந்தார். ஒரு ஆங்கிலப்படம் எடுக்கப்போவதாகவும், அதில் தமிழ் காட்சிகளும் இருப்பதாகவும், என்னை உதவி இயக்குனராகவும், நடிகராகவும் பங்காற்ற வேண்டுமென்று சொன்னார்கள்.

திரைப்படத்தை தயாரித்தவர், ஜோன் அடம்ஸ், கொழும்பில் சர்வதேசப்பாடசாலை ஒன்றில் ஆசிரியராகவிருந்தவர். இவரே திரைக்கதையை எழுதியதோடு, முக்கிய பாத்திரத்தில் நடித்தார்.



ஜோன் அடம்ஸ் (கதாசிரியர், தயாரிப்பாளர், நடிகர்)

கதை 150 ஆண்டுகளுக்கு முன்ன்ர் இலங்கையில் கோப்பிசெய்கை குறைந்துபோக, அதற்குப்பதிலாக, தேயிலை அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தை அடிப்படையாகக் கொண்டது. தேயிலையின் அறிமுகத்தோடு, இந்தியாவிலிருந்து தமிழ்த் தொழிலாளர்களும் வரவழைக்கப்பட்டார்கள். அதேபோல அக்கால பிரிட்டிஷ் ஆட்சியில், இங்கிலாந்திலிருந்து வெள்ளைக்கார துரைகள் நிர்வாகத்திற்கு என்று வந்தார்கள். தோட்டங்களுக்கு வெளியே வாழும் சிங்கள மக்களுக்கு, தேயிலை செய்கைக்காக ஆட்சிக்காரர்களினால் தங்கள் விளைநிலங்கள் ஆக்கிரமிக்கப்டுவதாக கோபம் இருந்தது.இந்த மூன்று சமூகங்களினதும் அக்கால வாழ்க்கை நிலையை சித்தரித்து உருவாகியது இத்திரைப்படம்.

திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பநாள் நுகேகொடையில் உள்ள ஒரு இணைத்தயாரிப்பாளரின் வீட்டில் விமரிசையாக கொண்டாட்ப்பட்டது.

உதவி இயக்குனருக்கான முன்தொகையை இணத்தயாரிப்பாளரிடமிருந்து பெறுகிறேன்.




கண்டிக்கு அண்மித்தான பகுதிகளிலும், தேயிலைத்தோட்டங்களிலும்(Muruthalawa Franion Estate), காலி கோட்டையின் உள்ளும், பாணந்துறையிலும் படப்பிடிப்பு நடந்தது.

இந்தப்படத்தில் நான் நடித்த முதலாவது காட்சி, ஒரு மலை உச்சியில் இருக்கும் பங்களாவிற்கு ஓடிப்போய், யானைகள் தோட்டத்திற்குள் வந்துவிட்டன என்று தோட்டத்துரைக்கு சொல்லவேண்டும். 10, 15 தடவக்ளுக்கு மேல் அந்தக்காட்சியை திருப்பி திருப்பி எடுத்தார்கள். நான் மட்டும் காரணமல்ல். என்னோடு அந்தக்க்காட்சியில் நடித்த ஜோன் அடம்ஸ் (தயாரிப்பாளர்-கதாநாயகன்) விட்ட தவறுகளும்தான். காரணம் எதுவாக இருந்தாலும் பலதடவை, கீழிருந்து மேலே களைக்க,களைக்க ஓடியது நான் தான்.




நானும் ஜோன் அடம்ஸ்ம்

மலை உச்சியில் உள்ள பங்களாவும் அங்கிருந்து பார்க்கும்போது கீழே தெரியும் பச்சை பசேலென்ற தேயிலைத் தோட்டங்களும், இடை இடையே செங்குத்தாக உயர்ந்து நிற்கும் மரங்களும் - அற்புதமான காட்சி. அதுவும் அதிகாலை வேளைகளிலேயே படப்பிடிப்புக்கு போகும் சந்தர்ப்பங்களில் அந்த ரம்மியமான காட்சியை பார்த்து ரசித்துக்கொண்டேயிருப்பேன்.

உதவி இயக்குனராக வாடக்காற்று திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவம் எனக்கு இப்படத்தில் உதவியாக இருந்தது. அடுத்தநாள் என்னென்ன காட்சிகள் எங்கே படமாக்கப்படும், யார் யார் நடிக்கிறார்கள் என்று முதல் நாளே தீர்மானிக்கப்பட்டபின், குறித்துக்கொள்வேன். அடுத்த நாள் அதிகாலையிலேயே அந்த நடிகர்களை மாத்திரம் எழும்பச்செய்து, மேககப் போட்டுக்கொள்ளச்செய்வேன். பிறகு படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு முதல் வாகனத்தில் சென்று காட்சிக்கான எல்லா உபகரணங்களும், பொருட்களும் தயாரா என்று பார்த்துக்கொள்வது என் வேலைதான். இயக்குனரும், நடிகர்களும் வரும்போது எல்லம் தயாராக இருக்கும். இருக்கவேண்டும்.


கதாநாயகி ஜேன் பிளேமிங், எனது மகளாக நடித்த கிகானி


ஆங்கிலப்பாத்திரங்களில்,Jon Adams, Jane Fleming ஆகியோர் நடிக்க சிங்கள்ப்பாத்திரங்களில் பிரபல நடிகை சபீதா பெரெரா, றொஜர் செனெவிரட்ன,சிறில் விக்ரமகே, மெனிக்கே அத்தநாயக்க போன்றோரும், தமிழ்ப் பாத்திரங்களில் நான் முக்கியபாத்திரத்தில் நடிக்க, எஸ்.ராம்தாஸ், மகேஸ்வரி ரத்தினம், எஸ்.சுரேஷ்ராஜா, கந்தையா,மோகன்,மாத்தளை கார்த்திகேசு, மல்லிகா கீர்த்தி போன்றவர்களும் நடித்தார்கள்


சிறில் விக்கிரமகே, மெனிக்கே அத்தநாயக்க, சபீதா பெரெரா


லயம் (லைன்) என்ற குடியிருப்புகளில் வாழும் மலையகத் தொழிலாளர்களின் காட்சிகள் படமாக்கப்ட்டன். அந்நேரத்தில் அவர்களது சோகமயமான வாழ்க்கை தெரிந்தது. அங்கே படப்பிடிப்பு நடக்கும்போது அவர்கள் மிகவும் உதவியாகவும், அன்பாகவும் நடந்து கொண்டார்கள்.


வசனங்கள் ஒத்திகை பார்க்கும் நான் (சாரத்துடன், வெள்ளைதொப்பியில்)






தோட்டத்தொழிலாளர்களில் ஒரு குடும்ப்பத் தலைவன் பாத்திரம் எனக்கு தரப்பட்டது. எனது மனைவியாக மகேஸ்வரி ரத்தினம், மூத்தமகளாக Gihani என்ற புதுமுக சிங்கள நடிகையும், மகனாக செந்தூரனும் நடித்தார்கள்.

ஒரு முக்கியமான காட்சியில், எனது மகள் தோட்டத்தை விட்டு ஊருக்குள் வேலைதேடிப் போகும் வேளையில் ஒவ்வோருவர் அருகில் சென்று விடைபெற்று செல்லும் காட்சியில், ஏறக்குறைய 12 பேர் அங்கங்கே நிறக அவள் செல்வதை கமரா வளைந்து வளைந்து செல்லும் தண்டவாளம் போன்ற பாதையில் , தடக்காமல், தளம்பாமல் சென்று அந்த நீண்ட காட்சியை படம் பிடித்ததும்,அத்தனை நடிகர்களும் தவறு விடாமல் நடித்த்தும் ஒரு சாதனைதான். எனக்கு சிறப்பாக நடிக்கக் கிடத்த ஒரு அருமையான காட்சியும் கூட.

படத்தில் (வலமிருந்து இடமாக) மோகன், நான், மகேஸ்வரி, கிகானி, செந்தூரன் (சிறுவன்)



இன்னுமொரு காட்சி - கொலராநோய் பரவி, அதனால் நோய்வாய்ப்பட்ட தோட்டத்தொழிலாளர்கள் தனி இடத்தில் வைக்கப்பட்டிருக்கும்போது அந்த லயம் தீப்பற்றி எரிகிற காட்சி. அந்தககாட்சிக்காக தனியாக் லயம் மாதிரி செய்து, அதற்குள் நடிகர்கள் சிலருடன், அந்த்த் தோட்டத்துள் உள்ள பிள்ளைகள் சிலரையும் வைத்து படம் பிடிக்க ஏற்பாடு. தீவைக்க முன்னர் இயக்குனர் முன் ஜக்கிரதையாக காட்சி அமைப்பை பார்த்தபொழுது, காட்சி அமைப்பாளர், நன்றாக எரியவேண்டுமென்பதற்காக, அங்கங்கே மண்ணெண்ணெய் தோய்த்த துணிகளையும் வைத்திருப்பதையும் பார்த்து திடுக்கிட்டுப் போய் விட்டார். அவற்றையெல்லம் அகற்றிவிட்டு தீ வைததபோதும் கொழுந்துவிட்டு சுவாலையுடன் எரிந்தது. இயக்குனர் கவனிக்காமல் தீ வைத்திருந்தால்... நினைக்கவே பயமாக இருக்கிறது.

இதே காட்சி படமாக்கப்பட்டபோது, சுவையான சம்பவம் ஒன்றும் நடந்தது. கதையின்படி எனது மகளும் (கிகானி) அதாற்குள் அகப்பட்டுவிட நான் அவளை காப்பாற்ர வெண்டும். அந்த நேர பரபரப்பில் நான் எரியும் தீக்குள் ஒடிப்போய், கிகானியைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்து பாரந்தாங்காமல் இருவருவருமாக விழுந்துவிட்டோம். பாவம் அந்த நடிகைக்கு பலத்த அடி.

அத்தோடு நான் விடவில்லை. மீண்டும் எழுந்து லயத்துக்குள் ஓடி, ஏறக்குறைய 250 இறாத்தல் எடையுள்ள நடிகர் கந்தையாவை அலாக்காக தூக்கிக் கொண்டு வந்து விட்டேன். இந்தமுறை விழ்வில்லை. அவரை எப்படித் தூக்கினேன் என்று எல்லோரும் ஆச்ச்ர்யப்பட்டர்கள். கூடவே விழுந்துவிழுந்து சிரித்தார்கள்.

காலியில் உள்ள கோட்டையின் உள்ளே நடந்த படப்பிடிப்பும் சுவாரஸ்யமானதுதான். உள்ளே அது ஒரு தனி நகரம்தான். கடைகள், தங்குவிடுதிகள், தபால் கந்தோர் என்று சகல் வசதிகளும் இருந்தன. ஒல்லாந்தர் காலத்து தேவாலயத்திலும், அண்மித்த பகுதிகளிலும், கோட்டை சுவர்களிலும் (ஆமாம்..சுவர்களின் மேலே தான்)படப்பிடிப்பு நடந்தது.

தென்னிந்திய தமிழ் தொழிலாளர்கள் வந்து படகுகளில் இறங்கும் காட்சி காலிக் கடற்கரையில் படமானது.

படப்பிடிப்பு முடிந்து 'டப்பிங்' முடிந்த காலத்தில் கனடா வருவதற்கான விசா கிடைத்தது. அதனால் படத்தை முழுமையாக பார்க்க எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

கொழும்பில் மெஜெஸ்டிக் திரையரங்கில் (1997) திரையிட்டார்கள். பத்திரிகை விளம்பரத்தில் எங்கள் பெயர்கள் எதுவுமே இல்லை.


Blendings பற்றிய ஆங்கில விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்


20வது கெய்ரோ சர்வதேச திரைப்பட விழாவிலும், லொஸ் ஏஞசல்ஸ் லோங்க் பீச் திரைப்பட விழாவிலும் காண்பிக்கப்பட்டது. இலங்கை விமர்சகர்கள் அமைப்பின் 1996ம் ஆண்டு சிறப்பு நடுவர் விருது பெற்றது.

No comments:

Post a Comment